Wednesday 30 March 2016

பஞ்ச பூத ஸ்தல கீர்த்தனைகள் - நெருப்பு - திருவண்ணாமலை

ராகம்: ஆரபி
தாளம்: ஆதி

பல்லவி
அண்ணாமலையானை அனுதினம் எண்ணவே
இன்பமயமான முக்தி பெறுவோம்

அனுபல்லவி
உண்ணாமுலைக்கு ஒருபாதி தந்தவர்
உலகோர் காண ஜோதியாய் நின்ற

சரணம்
கண்ணுதற் கடவுளாம் கங்கையணி சடையோன்
மின்னும் மழுவுடன் மானையும் ஏந்தியே
வெண்ணீறணிந்து வேங்கை உரி தரித்து
விண்ணவர் போற்றவே விடைமேல் வலம்வரும்

பொருள்:
அக்னி ஸ்தலமான அண்ணாமலையில் அமர்ந்து அருளும் அருணாச்சலேஸ்வரர் என்னும் அண்ணாமலையானை தினமும் எண்ணி வந்தால் இன்பமே நிலைத்திருக்கும் முக்தியை நாம் பெறுவோம். நினைத்தாலே முக்தி தரக்கூடிய ஸ்தலம் அண்ணாமலை.

ஸ்மாரனார் கைவல்ய ப்ரத சரணாரவிந்தம் என்று ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் தனது பஞ்ச பூத ஸ்தல கீர்த்தனங்களில், அருணாச்சல நாதம் ஸ்மராமி என்ற சாரங்கா ராக பாடலில் பாடியுள்ளார்.

உண்ணாமுலை அம்மை, ஸ்தலத்தின் நாயகி. அவளுக்கு தன் உடலில் ஒரு பாதியை (இட பாகத்தை) ஈசன் கொடுத்தார் என்பது அனைவரும் அறிந்ததே. திருக்கார்த்திகை தீபத்தின் போது, அர்தநாரீஸ்வரராக இறைவன் அண்ணாமலையில் வலம் வருவது, ஆண்டுதோறும் நாம் பார்த்து ரசிக்கும் ஒரு அனுபவம். அம்மைக்கு ஒரு பாதி கொடுத்த இறைவன், உலகோர் காண (பிரம்மா, விஷ்ணு உள்பட) நீண்டு வளர்ந்துக்கொண்டே இருக்கும் ஜோதிப்பிழம்பாக காட்சி அளித்தார். லிங்கோத்பவராக இருக்கிறார்.

இதனை,

வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும், விளங்கிய நான்முகனும் 
சூழ எங்கும் நேட ஆங்கோர் சோதி உள்ளாகி நின்றாய்

என்று சம்பந்த பெருமான், தனது திருநெடுங்களம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

கண்ணுதற் - கண் + நுதல் = நுதல் - நெற்றி. நெற்றிக்கண் உள்ள கடவுள், கங்கையினை தன் தலையில் அணிந்துள்ளார். மிளிரும் நெருப்பினையும், மான் ஒன்றினையும் தன் இருக்கரங்களில் தாங்கியுள்ளார். நெருப்பும், மானும், தாருகாவன முனிவர்கள் எய்தியவை. அவர்களின் கர்வத்தை அடக்க, அவற்றை தன் கரங்களில் ஏந்தினார் பெருமான்.

உடல் முழுதும் திருநீறு அணிந்து, வேங்கை (புலி) உரி (தோல்) அணிந்துள்ளார். தேவர்கள் போற்ற, வெள்ளை ரிஷபத்தின் (விடை) மேல் உலா வருவார்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Tuesday 29 March 2016

பஞ்ச பூத ஸ்தல கீர்த்தனைகள் - காற்று - காலஹஸ்தி

ராகம்: கௌளை 
தாளம்: மிஸ்ர சாபு

பல்லவி:
சீகாளத்தீசரைப் பணிவோம்
சின்மய வடிவானவர்
சிந்தைக் கவலை தீர்ப்பவர்

அனுபல்லவி;
நாகம் அணிந்த நீலகண்டன்
யோகம் அருளும் மோன குருபரன்
வாகீசற்குக் கயிலை காட்டிய  ஞானாம்பிகை மணாளன்
(சீகாளத்தீசரை)

சரணம்:
கண்ணப்பரை ஆட்கொண்டவர்
காற்றின் வடிவாய் ஆட்சி புரிபவர்
எண்ணம் யாவையும் நிறைவேற்றுவார்
எண் மா சித்திகளைக் கொடுத்தருளுவார்
(சீகாளத்தீசரை)

பொருள்:
சீ+காள+அத்தி+ஈசன் = சிலந்தி, நாகம், யானை ஆகிய இம்மூன்றும் வணங்கும் ஈசன். அவர்
1. சின்மய வடிவானவர் - தூய அறிவின் வடிவானவர்
2. சிந்தை கவலை தீர்ப்பவர் - மனதில் உள்ள கவலைகளை தீர்ப்பவர்

பாம்பை தன் நீல நிற கழுத்தில் அணிந்தவர். மௌன குருவாக அமர்ந்து யோகத்தை அருள்பவர்.
வாகீசற்கு  (திருநாவுக்கரசருக்கு) கயிலாயத்தை காளஹஸ்தியில் பெருமான் காட்டினார். அவரே ஞானாம்பிகையின் தலைவன்.

கண்ணப்ப நாயனாரை இத்தலத்தில் ஆட்கொண்டார் இறைவன். ஐம்பூதங்களுள் காற்றாக காளஹஸ்தியில் உள்ளார். இவரை வணங்கினால் நம் எண்ணங்கள் யாவும் நிறைவேறும். அனிமா, மஹிமா, லஹிமா, கரிமா முதலிய எட்டு சித்திகளையும் நமக்கு அருள்வார்.

பாடல் கேட்க:


Check this out on Chirbit

Tuesday 22 March 2016

பஞ்சபூத ஸ்தல கீர்த்தனைகள் - ஆகாசம் - தில்லை (சிதம்பரம்)

ராகம்: நாட்டை 
தாளம்: சதுஸ்ர ஜாதி ஏக தாளம் (திஸ்ர நடை)

பல்லவி:
தில்லை அம்பல வாணனே
சிவகாமி நாதனே சித்சபை வாசனே

அனுபல்லவி:
எல்லை இல்லாப் பெரியோனே 
நல்லோனே நான்மறை நாதனே (தில்லை)

சரணங்கள்:
வல்வினைகள் யாவுமே வல்லவா நின் நாமத்தைச்  
சொல்லிய மறுகணம் நில்லாது மறையுமே 
நல்லிசைப் பாக்களால் நாளும் நின்னைப் போற்றவே 
நல்லருள் புரிந்திடும் நாட்டையும் காத்திடும் (தில்லை)

பதஞ்சலி வ்யாக்ரபாதர் இரு முனிகளும் காணவே
சதங்கை கட்டி ஆடியே பிரபஞ்சத்தை நடத்திடும்
அதிர முழங்கும் உடுக்கையிருந்து அனைத்துமே தோன்றிட 
மதுரமான நகையுடன் தஹராகாசத்துள் உறையும் (தில்லை)

பொருள்:
தில்லை என்னும் க்ஷேத்ரத்தில் உள்ள சபையில் (அம்பலம்) உறைபவனே, சிவகாமியின் நாதனே, சித்சபையில் வசிப்பவனே. சித் - தூய அறிவு. தூய அறிவாக இறைவன் இருக்கிறார்.

முதலும் முடிவும் இல்லாத பெரியவனே. எல்லை இல்லாத ஆகாசம் போன்ற பெரியவன். நல்லோனே - நன்மைகளின் உறைவிடமே, நான்கு மறைகளாலும் பாடப்படும் நாயகனே.

கொடிய வல்வினைகள் அனைத்தும் வல்லவனான இறைவனின் நாமத்தை கேட்டால், அடுத்த நொடியிலேயே, அவ்விடத்தில் நிற்காது ஓடிவிடும்.

நல்ல இசையோடு கூடிய பாடல்களால் அனுதினமும் இறைவனை துதிப்பதால், நமக்கு இறைவன் நல்லருள் புரிவார். நாம் வாழும் நாட்டினையும் காப்பார். நாட்டை என்ற ராகத்தின் முத்திரை இங்கு பொருந்தியுள்ளது.

பதஞ்சலி, வ்யாக்ரபாதர் என்னும் இரு முனிவர்களும் காண, காலில் சதங்கைக்கட்டி ஆடி, பிரபஞ்சத்தில் அனைத்தும் உருவாகி, நடைபெற வழிவகுக்கிறார் நம் நடராஜன். இறைவனின் திருக்கரங்களில் உள்ள உடுக்கையின் சப்தத்திலிருந்து வேதம், உபநிஷத், வ்யாகர்ணம் முதலான வேத அங்கங்கள் போன்ற பல தோன்றின. பல செயல்கள் புரிந்தாலும், முகத்தில் இனிய 
புன்னகை ததும்ப தஹராகாசம் என்னும் இடத்தில் உறைகிறார். 

சிதம்பர ரஹஸ்யம் என்பது தஹராகாச வித்யை என்று சாந்தோக்ய உபநிஷத் மற்றும் ப்ரஹதாரண்யக உபநிஷத் இவ்விரண்டிலும் கூறப்பட்டுள்ளது. புக்தி முக்தி ப்ரத தஹராகாசம் என்று ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் தான் இயற்றிய ஆனந்த நடன பிரகாசம் என்ற கேதார ராக க்ருதியில் பாடியுள்ளார்.

5 தன்மாத்ரங்கள் (சப்த, ஸ்பர்ஷ, ரூப, ரஸ, கந்தம்) - பஞ்ச தன்மாத்ர ஸாயகா என்று அம்பாளுக்கு 1000 நாமங்களில் ஒரு நாமம். அதில் சப்தம் என்னும் ஒலி - ஆகாசத்தை குறிக்கும். ஆகசத்திற்கு ஒலி என்ற ஒரே ஒரு தன்மை மட்டுமே இருக்கிறது.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Saturday 12 March 2016

சுகந்த குந்தலாம்பிகா

ராகம்: நாட்டைக்குறிஞ்சி
தாளம்: ஆதி (2 கலை)

பல்லவி:
சுகந்த குந்தலாம்பிகே ஜகதம்பிகே
சுகப்ரதாயிகே ஜனனி மாமவ

அனுபல்லவி:
சகலே சகலலோகநாயிகே
சகலகலாநிபுனே வரதே

சரணம்:
பரிபூர்ண சந்த்ர வதனே
ஹரி சோதரி கிரிராஜ தனயே
த்ரிசிர கிரீஷ நாயிகே லலிதே
சாரமுனி சேவித மாத்ருபூத ஜாயே

பொருள்:
சுகந்தகுந்தலாம்பிகே - வாசம் நிறைந்த கூந்தலை உடைய அம்பிகே.

அம்பாளின் கூந்தலுக்கு இயற்கையாகவே நறுமணம் உண்டு. ஸ்ரீ லலிதா த்ரிசதியில், 30-வது நாமம் - ஏல சுகந்தி சிகுராயை நம: என்று வருகிறது. ஏலக்காய் வாசனை நிறைந்த கூந்தல் உடையவள் என்று பொருள்.

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில், 13 வது நாமம் - சம்பக-அசோக-புன்னாக-சௌகந்திக-லசத்கசாயை நம: என்று வருகிறது. சம்பகம், அசோகம், புன்னாகம், சௌகந்திகம் ஆகிய மலர்களின் வாசத்தை மிஞ்சும் வாசம் நிறைந்த கூந்தல் உடையவள் என்று வர்ணிக்கிறது. இம்மலர்கள், தங்களின் வாசத்தினை பெருக்கிக்கொள்ளவேண்டும் என்பதற்காக அம்பாளின் தலையில் இருக்கவேண்டும் என்று வேண்டியனவாம். அதற்காக அம்பாள் கருணையோடு அவற்றை தன் தலையில் சூடியுள்ளாள்.

சௌந்தர்ய லஹரி - 43 வது ஸ்லோகம்
துனோது த்வாந்தம் ந: துலித-தலித-இந்தீவர-வனம்
ன-ஸ்நிக்த-ச்லக்ஷ்ணம் சிகுர நிகுரும்பம் தவ சிவே
தீயம் ஸௌரப்யம் ஸஹஜம்-உபலப்தும் ஸுமனஸோ
வஸந்த்யஸ்மின் மன்யே வலமதன-வாடீ-விடபினாம்

சொல் - பொருள்:
சிவே - பரமசிவனின் பத்தினியே!
துலித-தலித-இந்தீவர-வனம் - மலர்ந்த கறுநெய்தல் காடு போல் பிரகாசிப்பதும்,
ன-ஸ்நிக்த-ச்லக்ஷ்ணம் - அடர்ந்த-வழவழப்பான-மென்மையான,
தவ சிகுர நிகுரும்பம் - உனது கேச பாரம்,
ந: - எங்களுடைய
த்வாந்தம் - அக இருளை
துனோது - போக்கட்டும்.

தீயம் - அதில் உள்ள
ஸஹஜம்  - இயற்கையான
ஸௌரப்யம் - வாசனையை
உபலப்தும் - அடைய விரும்பி
வலமதன - இந்த்ரனுடைய
வாடீ-விடபினாம் - நந்தவனத்தில் உள்ள மரங்களின்
ஸுமனஸ: - புஷ்பங்கள்
அஸ்மின் - அந்த கேசபாரத்தில்
வஸந்தி - வசிக்கின்றன
மன்யே - என நினைக்கிறேன்

விளக்கம் நன்றி: சௌந்தர்ய லஹரி பாஷ்யம் - ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் - ஸ்ரீ அண்ணா அவர்கள்.

அபிராமி பட்டர், கனம் தரும் பூங்குழலாள் என்று பாடியுள்ளார்.

இவ்வாறு அன்னையின் கூந்தலுக்கு இயற்கையாகவே மனம் உண்டு என்பதை நக்கீரர் அறிந்திருந்தாலும், மாயையினால் அவர் அதனை மறுத்தார். சிவபெருமானையும் உத்தேசிக்காது மறுத்தார். அதனை துடைதுக்கொள்ளவே, அடுத்த பிறவியில், நக்கீரர், ஸ்ரீ பாஸ்கரராயராக பிறந்து, ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாஷ்யம் செய்தார்.

ஜகதம்பிகே - ஜகத்திற்கு தாயே

சுகப்ரதாயிகே - சுகங்களை அள்ளித் தருபவளே

ஜனனி மாமவ (மாம் அவ) - தாயே, என்னை (மாம்) காப்பாய் (அவ).

சகலே - எல்லாமும் நீயே

சகலலோகநாயிகே - எல்லா உலகினையும் ஆள்பவள் நீயே (பூ, புவ, சுவ, ஜன, தப, மஹ, சத்ய ஆகிய மேல் 7 உலகங்கள் மற்றும் அதல, விதல, சுதல, ரஸாதல, தலாதல, மஹாதல, பாதாள ஆகிய கீழ் 7 உலகங்கள்)

சகல கலா நிபுனே - அனைத்து கலைகளிலும் வல்லவள் அம்பாள்.

வரதே - கலைகளை பக்தர்களுக்கு அளிப்பவள்.

சுகந்த குந்தலாம்பாளை வணங்கினால் ஆயக்கலைகள் 64-ம் நம்மிடம் வந்தடையும். சதுஸ் சஷ்டி கலாமயீ என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் அம்பாளை அழைக்கிறது.

பரிபூர்ண சந்த்ரவதனே - பௌர்ணமி நிலவினைப் போன்ற அழகிய முகம் உடையவளே. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் சாரு சந்த்ர நிபானனா என்று அழைக்கிறது.

ஹரி சோதரி - ஹரி என்னும் விஷ்ணுவின் சஹோதரியே

கிரிராஜ தனயே - மலையரசனின் புதல்வியே

த்ரிசிரகிரீஷ நாயிகே - திரிசிர மலை நாயகனின் நாயகியே

லலிதே - விளையாட்டாக அனைத்தையும் நடத்துபவளே

சாரமுனி சேவித மாத்ருபூத ஜாயே - சார முனி வணங்கும் மாத்ருபூதேஸ்வரரின் மனதிற்கு மகழ்ச்சி அளிப்பவளே.

சாரமுனி என்னும் மகாமுனிவர், , தன் உடலின் இயலாமையால்  மலை மேல் உள்ள ஈசனை காண முடியவில்லையே என்று தாபப்பட்டுக்கொண்டார். அவரின் விருப்பத்திற்காக அதே மாத்ருபூதேசன், கீழே ஸ்ரீ நாகநாதராக, நந்தி கோவில் தெருவில் உள்ள கோவிலில், இன்றும் காட்சித் தருகிறார். நகநாதர் என்றே அவரின் பெயர். நக என்றால் மலை. நகநாதர் என்ற பெயர் மருவி நாகநாதர் என்றானது. இது ப்ரம்மாண்ட புராணத்தில், த்ரிசிரகிரி மாஹாத்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே சாரமுனிவரின் சிரத்தில் தோன்றிய வெண்ணாவல் மரநிழலின் கீழே, அப்பு லிங்கமாக, ஸ்ரீ ஜம்புகேஸ்வரர், திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள திருவானைக்கா என்னும் ஸ்தலத்தில் அருள்பாலிக்கிறார்.

திருச்சிராப்பள்ளி என்னும் ஸ்தலத்தில் ஸ்ரீ கல்யாண மாத்ருபூதேஸ்வரர் என்னும் தாயுமான ஸ்வாமியின் தேவிக்கு, மட்டுவார்குழலி என்று மற்றொரு பெயர் உண்டு. தாயுமான ஸ்வாமிக்கு முதலில் ஜவ்வந்தி நாதர் என்றே பெயர் இருந்தது. ஜவ்வந்தி மலர்கள் நிறைந்த நந்தவனம் சுற்றுவட்டார பகுதிகளில் நிறைந்து இருந்ததால் அவ்வாறு அழைக்கப் பெற்றார். ஸ்வாமிக்கு ஜவ்வந்தி மலர்கள் என்றால் அலாதி ப்ரியம்.

ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் திருச்சிராப்பள்ளி ஈசன் மீது ஸ்ரீ மாத்ருபூதம் என்ற பாடல் பாடியுள்ளார். அதில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுவாஸித நவ ஜவந்தி புஷ்ப விகாச ப்ரிய ஹ்ருதயம் - அதாவது நல்ல வாசனை நிறைந்த புதியதாய் மலர்ந்த ஜவ்வந்தி பூவின் நறுமணத்தில் நாட்டமுள்ள இதயம் உடையவர் என்று பொருள்.

ரத்னாவதி என்னும் வைஸ்ய குல பெண்ணிற்கு, ஸ்வாமியே நேரில் வந்து, ரத்னாவதியின் தாய் போல் வேடம் தரித்து, ப்ரசவம் பார்த்து, அழகிய ஆண் மகனை ரத்னாவதி ஈன்றெடுக்க உதவியதால், தாயுமானவர் (அ) மாத்ருபூதேஸ்வரர் என்று பெயர் பெற்றார். ஸ்ரீ தீக்ஷிதர் மேலே குறிப்பிட்ட க்ருதியில் வைஸ்யஜாதி ஸ்திரீ வேஷ தரணம் என்று பாடியுள்ளார். வைஸ்யஜாதி பெண் வேடம் பூண்டவர் என்று பொருள்.

ஸ்ரீ லலிதா த்ரிசதி, நக்கீரர், சாரமுனி பற்றிய தகவல்கள் நன்றி:
திரு S.பாலசுப்ரமணியன் (கோனேரிராஜபுரம் - பெங்களூரு)

பாடல் கேட்க:

Check this out on Chirbit