Friday 25 June 2010

தாயுமானவர்

ராகம்: ஆரபி
தாளம்: ஆதி

பல்லவி
த்ரிசிரகிரி வாசம் ஈஸ்வரம் த்ரைலோக்ய நாதம்
ஸாமகான ப்ரிய சங்கரம் சதாசிவம் மங்களகரம்

அனுபல்லவி
த்ரிநயன வதன சுந்தர ஸ்வரூபம்
ஹரி விரிஞ்சாதி வந்தித பரம்
சுரகுரும் பசுபதிம் ஜகத் காரணம்
ம்ருகதரம் பன்னக பூஷணம் வந்தே

சரணம்
பவ ரோக ஹரம் ம்ருத்யுஞ்ஜயம்
ஸனகாத்யஷ்ட மகாமுனி பூஜிதம்
ஸதிபதிம் ந்ருத்ய கலாதிபதிம் க்ரஹ
தோஷ நிவாரணம் சந்தோஷ காரணம்
ஸஹஸ்ர சங்க பலசாரபிஷேக
ப்ரியகரம் நித்ய சுப பல தாயகம்

மத்யம கால சாஹித்யம்
வனித மஹாமணி புவன வசங்கரி
சுகந்த குந்தளாம்பிகா ஸமேதம்
வணிக குல ஸ்திரீ ரத்ன சுககரம்
ஸ்ருதஜன பூஜித மாத்ரு பூதேசம்

விளக்கம் 
த்ரிசிரகிரி வாசம் - த்ரிஷிரன் என்ற அசுரன் அமைத்த மலை, திரிசிர கிரி - திருச்சிராப்பள்ளி. அந்த மலையில் வசிப்பவர்.

ஈஸ்வரம் - ஈசன்.

த்ரைலோக நாதம் - அவர் மூவுலகுக்கும் (பூமி, பூமிக்கு மேல் உள்ள லோகங்கள் (சுவர்க்கம்) , பூமிக்கு கீழ் உள்ள லோகங்கள் (நரகம் - பாதளம்) - என மூன்று லோகங்களுக்கு தலைவன்.

ஸாமகான பிரிய  - ஸாம வேதத்தில் (கானத்தில்) அதிக விருப்பம் உள்ளவர்

சங்கரம் - நல்லதை நடத்தும் கரம் கொண்டவர்.

சதாசிவம்  - சதா சிவன் ( பஞ்ச க்ருத்யம் எனப்படும், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் இவற்றில், அருளல் என்னும் செயல் செய்பவர்). அருள் வழங்குபவர் என்று பொருள் கொள்ளவேண்டும்.

மங்களகரம்  - சுபம் - நல்லனவற்றை அருள்பவர்

த்ரிநயன வதன சுந்தர ஸ்வரூபம் - மூன்று கண்கள் உடைய அழகிய வடிவம்

ஹரி விரிஞ்சாதி வந்தித பரம் - ஹரி - விஷ்ணு, விரிஞ்சி - பிரம்மா, முதலியவர்கள் வழிபடும் பரம் பொருள்.

சுரகுரும்  - தேவர்களின் குரு (ப்ரஹஸ்பதி)

பசுபதிம் - உலக உயிர்களுக்கு அதிபதி

ஜகத் காரணம் - உலகம் தோன்ற காரணமானவர் (இந்த இடத்தில், சிவன், எல்லா  ஜீவ ராசிகளுக்கும்  தந்தை என எடுத்துக்கொள்ளவும்).

ம்ருகதரம்  - ம்ருக - மான். மானினை கையில் கொண்டவர்.

பன்னக பூஷணம்  -  நாகத்தினை நகையாக அணிந்தவர்.

வந்தே - உன்னை வணங்குகிறேன்.

பவ ரோக ஹரம்   - பவ ரோக ஹரன் - சம்சார துன்பத்தை அழிப்பவன். (ப்ரனதார்திஹரன் - ப்ராண - ஆர்த்தி - ஹரன் - பிறவி துன்பத்தை அறுப்பவன்)

ம்ருத்யுஞ்ஜயம் - ம்ருத்யு - மரணம் - மரணத்தை வெற்றிகொள்ள செய்பவன். (கால சம்ஹார முர்த்தி - மார்கண்டேயனுக்காக யமனை உதைத்தார் அல்லவா?)

ஸனகாத்யஷ்ட மகாமுனி பூஜிதம் - ஸனகர் முதலிய 8 முனிகள் வணங்குகிறார்கள். பொதுவாக ஸனகர் , சனந்தனர் , சனாதனர் , சனத் குமாரர்  என்ற 4 பிரம்மாவின் மானச புத்திரர்கள், தக்ஷினாமுர்த்தியை வணங்குவார்கள். திருச்சி மலைக்கோவிலில், இவர்கள் நால்வரைத் தவிர, பதஞ்சலி, வியாக்ரபாதர் , திருமூலர், சிவயோக முனி  என இன்னும் நால்வர் தொழுவார்கள். தக்ஷினமுர்த்தி சந்நிதியில் பார்த்தால் தெரியும். அதனால் இவ்விடத்தில் அஷ்ட முனி என்று எழுதி உள்ளேன்.

ஸதிபதிம் - ஸதி ஆகிய பார்வதியின்  கணவர்.

ந்ருத்ய கலாதிபதிம்  - நாட்டிய கலையின் அதிபதி

க்ரஹதோஷ நிவாரணம் - நவக்ரஹங்களினால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தையும் போக்கி ஆறுதல் தருபவர். (தாயுமானவர் கோவிலில், நவக்ரஹ சந்நிதியில் ஒரு புதுமை பார்க்கலாம். சூரியன் நடுவில் நிற்க, அவரை பார்த்தே மற்ற க்ரஹங்களும் நிற்பார்கள் . அதனால் இங்கு வழிபடுபவர்களுக்கு க்ரஹங்களின் வக்கிர  பார்வை இல்லாமல், நற்பார்வை  மட்டுமே கிட்டும்).

சந்தோஷ காரணம் - பக்தர்களின் மன மகிழ்ச்சிக்கு காரணமானவர்.

ஸஹஸ்ர சங்க பலசாரபிஷேக ப்ரியகரம்  - 1000 சங்கு, பழங்கள், அவற்றின் சாறு ஆகியவற்றால் அபிஷேகம் செய்தல் , அவருக்கு விருப்பமான ஒன்று. அதனால், அகமகிழ்ந்து அருள்வார். 1008 சங்காபிஷேகம், ஜேஷ்டாபிஷேகம்  (கேட்டை நக்ஷத்ரத்தின் அன்று, பழ சாறுகளால் தாயுமானவருக்கு அபிஷேகம் செய்வார்கள்).  இவ்வரியில், ஆரபி ராக முத்திரையை பலசாரபிஷேக  என்னும் இடத்தில அமைந்துள்ளது.

நித்ய சுப பல தாயகம் - என்றும் மங்களத்தை அருள்பவர்.

வனித மஹாமணி - பெண்களில், மிக உயர்ந்தவள்  ( மாணிக்கம் போன்றவள் )

புவன வசங்கரி - உலகை தன்வசப்படுத்தியவள்

சுகந்த குந்தளாம்பிகா ஸமேதம் - சுகந்த குந்தளாம்பிகை  என்னும் மட்டுவார்குழலி  (மணம் மிகுந்த கூந்தல் உடையவள்) யை மனம் புரிந்தவர்.

வணிக குல ஸ்திரீ ரத்ன சுககரம் -  ரத்னாவதி, ஒரு வணிகக்குலத்தை சேர்ந்த பெண். சிவா பக்தி மிக்கவள். நிறை மாத கர்பிணியாக இருந்த அவளிற்கு, துணை ஒருவரும் இல்லாமல் போக,  தாயக வந்து பிரசவம் பார்த்தவர். சுகமாக பிள்ளையும் பிறந்தது.

ஸ்ருதஜன பூஜித மாத்ரு பூதேசம் - மனிதர்கள் மாத்ருபுதேஸ்வரராக (தாயுமானவர்) இவரை வணங்குகின்றனர்.

பாடலை கேட்க கீழே அழுத்தவும்:

Check this out on Chirbit