Friday 26 February 2016

ஸ்ரீ நரசிம்மர்

ராகம்: பிலஹரி
தாளம்: ஆதி (2 கலை)

பல்லவி
ஸ்ரீ நரசிம்மம் பர பிரம்மம்
சிந்தயேஹம் சந்ததம்

அனுபல்லவி
அகிலாண்ட வ்யாப்தம் ஏக ஸ்தம்ப சம்பூதம்
தைத்ய குலாந்தகம் ப்ரஹ்லாத வரதம்

சரணம்
அனந்த கல்யாண குண நிகரம்
வனஜ லோச்சனி ஸஹித ப்ரபாகரம்
விதி சூரேஷாதி வந்தித சரணம்
ஸ்ருதி நிகமாகம ஸ்தோத்ர காரணம்

மத்யம கால சாஹித்யம்
கலிமல ஹரணம் வர நிபுணம்
பிலஹரி ராக ப்ரியம் சுப கரம்
ப்ரதோஷ கால ஆராதித்த வீரம்
ப்ரேத பைசாசாதி பீதி நிவாரணம்

பொருள்:

முன்னுரை:
பெருமாளின் ப்ரபலமாக பேசப்படும் அவதாரங்கள் 10. ஸ்ரீ மத் பாகவதம் ஸ்ரீ மஹா விஷ்ணு 22 அவதாரங்கள் எடுத்ததாக (21 எடுத்து முடிந்தவை, 1 கல்கி இன்னும் எடுக்க வேண்டிய ஒரு அவதாரம்) குறிப்பிடுகிறது. அதில் பக்தனுக்காக உடனடியாக எடுத்த அவதாரம் ஸ்ரீ ந்ருசிம்ஹ அவதாரம். ந்ரு + சிம்ஹம் அதனை நரசிம்மம் என்றும் கூறுவார். நர - மனிதன். சிம்மம் - சிங்கம். சிங்க முகமும், மனித உடலும் கொண்ட அவதாரம்.

ஸ்ரீ வைகுண்டத்தில், வாயில் காப்பாளர்களாக இருவர், ஜெயன், விஜயன் என்று இருந்தனர். பிரம்மாவின் மானச புத்திரர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனத் குமாரர் ஆகிய நால்வரும், மகாவிஷ்ணுவை காண வைகுண்டம் சென்றனர். வாயிலில், இந்த காவலர்கள் அவர்களை தடுத்தனர். பெருமாள் ஓய்வு எடுத்துக்கொண்டிருப்பதாகவும் இப்போது அவரை காண இயலாது எனவும் கூறினார்.

முனிகள் கோபமுற்று அவர்களை சபித்தனர். வைகுண்டம் விட்டு பூலோகம் செல்ல வேண்டும் என்பதே அந்த சாபம். தங்கள் தவறை உணர்ந்த இருவரும் இந்த சாபத்திற்கு விமோசனம் கேட்டனர். மனம் இரங்கிய முனிகள் நால்வரும், 7 பிறவிக்கு விஷ்ணு பக்தனாக இருக்கவேண்டும். இல்லையேல் 3 பிறவிகள் விஷ்ணுவை வெறுப்பவர்களாக இருக்கவேண்டும் என்று 2 வழிகளை அவர்களுக்கு கொடுத்தனர். சற்று யோசித்த ஜெய-விஜயர்கள், பகைவனாக இருந்தாலும் மூன்று பிறவிகள் தானே பெருமாளை விட்டு பிரிய வேண்டும். பகைவர்களாக 3 பிறவிகளை எடுத்து வர தங்களுக்கு சம்மதம் என்று கூறி பூலோகத்தில் அசுரர்களாக பிறந்தனர்.

க்ருத யுகத்தில் (சத்ய யுகம்) ஹிரண்யாக்ஷன் - ஹிரண்ய கசிபுவாகவும், த்ரேதா யுகத்தில் ராவண-கும்பகர்ணனாகவும், த்வாபர யுகத்தில் சிஷுபால-தந்தவக்ரனாகவும் பிறவி எடுத்தனர்.

சத்ய யுகத்தில் ஹிரண்யாக்ஷனை வராஹ அவதாரம் கொண்டு பெருமாள் வதம் செய்தார். ஹிரண்ய கசிபுவை நரசிம்மமாக வந்து கொன்றார்.

த்ரேதா யுகத்தில் ராமனாக வந்து ராவணனையும், கும்பகர்ணனையும் அழித்தார்.

த்வாபர யுகத்தில் கிருஷ்ணனாக அவதரித்து சிசுபாலன், தந்தவக்ரன் இருவரையும் கொன்றார்.

இறுதியில் இருவரும் வைகுண்டம் சென்றனர். சாப விமோசனம் பெற்றனர்.

ஹிரண்ய கசிபுவின் மகன் ப்ரஹ்லாதன். தன் தாய் லீலாவதியின் கருவில் இருக்கும் போதே, ஸ்ரீ நாரத முனி, ப்ரஹ்லாதனுக்கு நாராயண நாம மந்த்ரத்தை உபதேசம் செய்தார். அதன் விளைவாக, ப்ரஹ்லாதன் பரம விஷ்ணு பக்தனாக பிறந்தான். ஹிரண்ய கசிபு தன் நாட்டில் தன்னையே அனைவரும் துதிக்க வேண்டும், விஷ்ணுவை துதித்தால் அவர்களை கொலை செய்துவிடுவதாக சொல்லி மிரட்டியிருந்தான். அவனது மகன், விஷ்ணுவை மட்டுமே துதித்து வந்தான். அதோடு மட்டும் அல்லாது மற்றவர்களையும் மாற்றிக்கொண்டிருந்தான். இதனால் கோபமுற்ற ஹிரண்ய கசிபு, தன் சொந்த மகனை கொல்லுவதற்கு பல முறை முயற்சி செய்தான்.

மலையிலிருந்து உருட்டினான், கடலுக்கடியில் கல்லோடு கட்டி போட்டன், யானையை கொண்டு மிதிக்க வைத்தான், பட்டினி போட்டன், விஷத்தை கொடுத்தான். ஆனால் ஒவ்வொரு செயலையும் பகவான் முறியடித்தார்.

மலையிலிருந்து தள்ளிய போது பூமா தேவி தாங்கிக்கொண்டாள்.
கடலுக்கடியில் போட்ட போது, வராஹ ரூபமாய் பூமியை காத்தவாறு பெருமாள் ப்ரஹ்லாதனை காத்தார்.
யானையை எய்த போது, யானையின் சினத்தை பெருமாள் தனித்து, ப்ரஹ்லாதனுக்கு அந்த யானை மாலையிட்டது.
பட்டினி போட்ட போது, மஹாலக்ஷ்மி பிராட்டியே சிறையில் அவனுக்கு உணவளித்தாள்.
விஷத்தை கொடுத்த போது, அதனை அம்ருதமாக மாற்றினார் பெருமாள்.

இறுதியில் ஹிரண்ய கசிபு, "யார் அந்த ஹரி? எங்கே இருக்கிறான்?" என்று ப்ரஹ்லாதனை கேட்டான். அதற்கு "தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான். எங்கும் இருப்பான்" என்று ப்ரஹ்லாதன் கூறினான். கோபம் கொண்டு, தூண் ஒன்றை பிளந்தான். அதிலிருந்து ஸ்ரீ நரசிம்மமாக பெருமாள் வெளி வந்தார்.

குழந்தை, எங்கும் இருப்பான் என்று சொன்னதற்காக எல்லா இடங்களிலும் சென்று வ்யாபித்துக் கொண்டார் பெருமாள். இறுதியில் தூணை அரக்கன் பிளந்ததால் அதிலிருந்து வெளிப்பட்டார்.

பின்னர் ஹிரண்யனை சம்ஹாரம் செய்தவை நாம் அறிந்தவையே.

இனி இந்த கீர்த்தனைக்கு வருவோம்.

பல்லவி:
பர பிரம்மமான ஸ்ரீ நரசிம்மரை நாளும் சிந்தனை செய்கிறேன்.

அனுபல்லவி:
அகிலத்தில் எங்கும் வியாபித்திருந்தாலும், ஒற்றை தூணிலிருந்து வெளிப்பட்டார். தைத்யர்களை அழித்தார். ப்ரஹ்லாதனுக்கு அனுக்ரஹம் செய்தார்.

தைத்யர்கள் - திதி தேவியின் புதல்வர்கள். அசுரர்கள். கஷ்யப ப்ரஜபதிக்கு திதி, அதிதி என்று இரு மனைவிகள். திதியின் புதல்வர்கள் அசுரர்கள். அதிதியின் புதல்வர்கள் தேவர்கள்.

சரணம்:
அனந்த கல்யாண குண நிகரம்- முடிவில்லாத, மங்களமான குணங்களின் குன்று/ குவியல்
வனஜலோச்சனி சஹித ப்ரபாகரம் - தாமரை கண்கள் கொண்ட லக்ஷ்மி தேவியோடு கூடிய, அருள் ஒளி வீசும் கரங்கள் உடையவர்.
விதி சூரேஷாதி வந்தித சரணம் - விதி - பிரம்மா, சுரேஷன் - சுரர்களின் (தேவர்களின்) தலைவன் - இந்திரன், ஆகிய பலர் வணங்கும் பாதங்களை கொண்டவர்.
ஸ்ருதி நிகமாகம ஸ்தோத்ர காரணம் - வேதம், உபநிஷத் போன்றவை துதிக்கும் காரணப்பொருளாவார்

மத்யம காலம்:
கலிமல ஹரணம் வர நிபுணம் - கலி தோஷத்தை போக்குபவர். வரங்களை அளிப்பதில் வல்லவர்.

பிலஹரி ராக ப்ரியம் சுப கரம் - பிலஹரி ராகம் என்றால் ந்ருசிம்மனுக்கு அதீத ப்ரியம். மங்களங்கள் நல்கும் கரங்கள் உடையவர்.

ப்ரதோஷ கால ஆராதித்த வீரம் - ப்ரதோஷ காலத்தில் தான், ஹிரண்ய கசிபுவை வதம் செய்தார். அந்த நேரத்தில் நரசிம்மரின் வீரத்தையும் அவரையும் ஆராதித்தால் மிகவும் மகிழ்வார்.

ப்ரேத பைசாசாதி பீதி நிவாரணம் - நரசிம்மர் பூதம், பிரேதம், பைசாசம் (பிசாசு) தொடர்பான பயத்தை போக்கி, தைரியத்தை அருள்வார்.

பஞ்ச முக ஆஞ்சநேய ஸ்துதியில், தெற்கு முகம், நரசிம்மருடையது. அந்த ஸ்லோகம்
ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய
தக்ஷின முகே கரால வதனாய ந்ருசிம்ஹாய
சகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா
என்று வரும்.

பஞ்ச முகங்கள்:
கிழக்கு - ஹனுமான்
தெற்கு - ந்ருசிம்ஹர்
மேற்கு - கருடர்
வடக்கு - ஆதி வராஹர்
மேல் முகம் - ஹயக்ரீவர்.

அதர்வ வேதத்தில், ந்ருசிம்ஹ தாபினி உபநிடதத்தில் பூர்வ பாகத்தில், 2-வது அத்தியாயத்தில் ஸ்ரீ நரசிம்மரின் வீரம் பற்றிய மந்திர குறிப்புகள் உள்ளன.

தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் 18-ல் ஒருவரிடம், விஷ்ணுவின் 10 அவதாரங்களில் முக்கியமாக வழிபட வேண்டிய அவதாரங்கள் எவை என்று கேட்டதற்கு, அவர், "எளியன் இடையன் இளிச்ச வாயன்" என்ற பதில் சொன்னார். இடையன் - ஸ்ரீ கிருஷ்ணன்.
எளியன்- ஸ்ரீ ராமன் (வனவாசம் செய்து எளிய வாழ்க்கை மேற்கொண்டமையால் எளியன் என்று சொன்னார் போலும்)
இளிச்ச வாயன் - ஸ்ரீ ந்ருசிம்ஹன் (சிங்கம் தன் வாயை திறந்த படி வைத்திருக்கும் அல்லவா? அதனால், ந்ருசிம்ஹனை இளிச்ச வாயன் என்று சொல்லியிருக்கிறார்).

பாடல் கேட்க:

Check this out on Chirbit